இன்றைய இலங்கை



இனவாத அரசியலின் தீவிர போக்கு நாட்டின் பாரம்பரிய அரசியல் நிர்மாணத்தை மிகவும் கீழான நிலமைக்கு எடுத்துச் சென்று அரசு  என்பது தோல்வி அடைந்த ஒன்று என வர்ணிக்கும் அளவுக்கு மாற்றியுள்ளது. ஆசியாவிலே மிக நீண்ட கால ஜனநாயக நாடு எனக்கருதப்பட்ட இலங்கை தற்போது மனித உரிமை மீறல்களில், பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நாடு என்ற வரிசையில் வைக்கப்படும் அளவுக்கு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டின் அரசியல் சூழல் அண்மைக்காலமாக புதிய மாற்றம் ஒன்றை நோக்கி நகர்ந்தேவிட்டுள்ளது. அதாவது அரசியல் கட்டுமானங்களில்  ராணுவ ஆதிக்கம் பலமடைந்து வருகிறது. ராணுவ உயர் அதிகாரிகள் அரசியல் பேசும் அளவுக்கு மாற்றங்கள் காணப்படுகின்றன. அத்துடன்  ராணுவ அதிகாரிகள் சிவில் அதிகாரிகளின் பதவிகளை நிரப்பி வருகின்றனர். பாதுகாப்பு என்ற அடிப்படையில் சிங்கள பேரினவாத அரசியல் நிகழ்ச்சி நிரல் அரங்கேறி வருகிறது. இதனால் நாட்டின் சிறுபான்மைக் குழுக்கள் அச்சமடைந்துள்ளன. குறிப்பாக விடுதலைப்புலிகளைத்  தோற்கடித்தது இலங்கை ராணுவம் எனக் குறிப்பிடுவதை விடுத்து சிங்கள பௌத்த இளைஞர்களின் தியாகங்களே நாட்டைக் காப்பாற்றியதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது தேசியவாதத்தின் புதிய பரிமாணத்தை உணர்த்துகிறது. விடுதலைப்புலிகளின்  பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் மூலம் நாட்டிற்குப் புதிய சுதந்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக விபரிக்கப்படுகிறது. இப்போக்குகள் உள்நாட்டு அரசியலில் மட்டுமல்ல வெளிநாட்டு அரசியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மேற்கு நாடுகளின் பிடியிலிருந்து  விலகிச் செல்வதாகக் காட்டும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்குலக நாடுகள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்தமை, ஐரோப்பிய யூனியன் சந்தை வசதிகளை சலுகை அடிப்படையில் பயன்படுத்தும் ஏற்பாடுகளுக்கு தடையாக இருந்தமை, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய உதவிகளைத்  தாமதப்படுத்தல் என்பன இலங்கையின் மேற்குலக போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை உறுதி செய்கின்றன. அதுமட்டுமல்லாது சமீப  காலமாக இலங்கை அரசு நட்புப் பாராட்டும் அரசுகள் மனித உரிமை மீறல்களுக்கு மிகவும் பேர் போன அரசுகளாகும். ஈரான், லிபியா,  பாகிஸ்தான், சீனா, பர்மா போன்ற நாடுகளோடு இலங்கையின் உறவுகளும், கூட்டுகளும் ஓர் ஆரோக்கியமான உறவுகளாக கருத முடியவில்லை.
இலங்கை அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கான அடிப்படைகளாக அங்கு காணப்படும் மிகவும் பிற்போக்குத் தன்மையுள்ள  தேசியவாதமே காரணமாக அமைகிறது. தமிழ் குறும்தேசியவாதத்தில் காணப்பட்ட பாசிச குணாம்சங்கள், சமூக விரோத சக்திகளினதும்,  பிற்போக்கு சுயநலக் கும்பல்களின் இருப்பிடமாக மாறிய போராட்டத்தலைமை, இதற்கு ஆதாரமாக வெளிநாடுகளில் செயற்பட்ட சர்வதேச அரசுகள், இலங்கை அரசு தொடர்பாக தற்போது நடந்து கொள்ளும் முறை அதனை இன்னொரு பக்கத்திற்கு தள்ளியுள்ளது. புதிய  நட்பு  நாடுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான், ஈரான், லிபியா, சீனா, பர்மா போன்ற நாடுகளின் அரசுகள் உள்நாட்டில் மிகவும் ஜனநாயக விரோத கட்டுமானங்களைக் கொண்டனவாகும். ராணுவமே அரச கட்டுமானங்களில் ஆதிக்கம் செலுத்தும் போக்கைக் கொண்டன. இதனால்  மனித உரிமை மீறல் இந் நாடுகளில் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. இவ்வாறான மிகவும் பாரதூரமான ஜனநாயகத் தன்மையற்ற  அரசுகளோடு கூட்டுகளை உருவாக்கி வரும் போக்கு மிகவும் அச்சத்தைத் தருவதாகும். இக் குழப்பமான அரசியல் நிலமைகளின் இயக்கு  சக்தியாக தேசியவாதமே காணப்படுகிறது. சிங்கள அரசியலில் சமீபத்தில் எற்பட்டு வரும் மாற்றங்கள் நாட்டின் கடந்த காலங்களில்  காணப்படாத அம்சங்களாகும். இவை குறித்து பல தரப்பட்ட வாதங்கள் இல்லாமலில்லை.
குறிப்பாக மேற்குலக நாடுகளின் சந்தையாக செயற்பட்டு வந்த இலங்கை தற்போது அந்தக் கூட்டிலிருந்து வெளியேறி வருவதாகவும்,  இதனால் நாடு ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விலகுவதாகவும் கூறி இவ்வாறான அடிப்படை மாற்றத்தைப் பலப்படுத்த வேண்டுமென்ற  வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவ் வாதங்களில் சில நியாயங்கள் காணப்பட்ட போதிலும் மகிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்சிக்  காலத்தில் காணப்படும் அதாவது சில வருடங்களாக மேற்கொள்ளப்படும் மாற்றங்களை மட்டும் வைத்து தேசத்தின் முழுமையான  போக்கைத் தீர்மானிக்க முடியுமா? என்பதும், இத்தகைய மாற்றங்கள் கொள்கை ரீதியான தீர்மானங்களின் விளைவாக ஏற்பட்டதா? அல்லது  சிக்கலான பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக விடுபடுவதற்காக எடுக்கப்பட்ட முடிவுகளா? என்பது இன்னமும் தெளிவாக இல்லை.  அத்துடன் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிடம் கடன் வசதியைக் கோரி நிற்கும் அரசு  பொருளாதார கட்டுமானங்களில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துமா? என்பது கேள்வியாக உள்ளது.
ஆட்சியாளர்கள் தாம் எதிர் நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு தமது அμகுமுறைகளில்  தேசியவாத அம்சங்களைப் புகுத்தி மக்களின் கவனத்தை திருப்ப எடுக்கும் உத்திகளாகவே இவை உள்ளன. தமிழ் குறும் தேசியவாதமும், அதன் வன்முறை சார்ந்த அரசியலும் தேசிய பொருளா தாரத்தையும், அரசுக் கட்டுமானத்தையும் மிகவும் மோசமான நிலைக்குத்தள்ளியுள்ளது என்பதே யதார்த்தமாகும். நாட்டில் காணப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் எதேச்சாதிகார சக்திகளின் இருப்பிடமாக மாறியமைக்கு தற்போதுள்ள அரசியல் அமைப்பு பிரதான காரணம் என்பதை நாம் ஏற்றாக வேண்டும். இதனால் ஓர் குழுவினரின்  ஆதிக்கத்தின் இருப்பிடமாக அரசு யந்திரம் மாறியுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு என்ற  போர்வையில் இடம் பெறும் இந் நடவடிக்கைகள் அரசியல் அமைப்பின் ஏனைய செயற்பாடுகளை முழுமையாக முடக்கி ஓர் ராணுவ ஆட்சியை ஒத்த நிலமைகளை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 30 வருட காலமாக நாட்டில் இடம்பெறும் வன்முறை சார்ந்த அரசியல் போக்கு சிங்கள தேசியவாத சக்திகளின் இருப்புக்கு மிகவும் ஊக்கமளித்துள்ளது. ராணுவ மயமாக்கல் என்பது சகல மட்டங்களிலும் நடந்தேறுகிறது. இவ் ராணுவ  மயமாக்கல் தேசியவாதம் கலந்த க லவையாக மாறி வருவதால் சிறுபான்மை மக்களிடையே மிகுந்த அச்சம் எற்பட்டுள்ளது.
சிங்கள பகுதிகளில் தாண்டவமாடும் சிங்கள பௌத்த மத மேலாதிக்க சிந்தனைகள் சிங்கள கிறிஸ்தவர்களை, முஸ்லிம்களை மிகவும்
இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது. எனவே நாட்டில் வாழும் மக்கள் மொழி ரீதியாக மட்டுமல்ல மத ரீதியான சிறுபான்மையினரும்  சிங்கள தேசியவாத எழுச்சியினால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இலங்கையின் எதிர்காலம் குறித்து நாம் தற்போது சிந்திப்பதாயின் தேசியவாத  சிந்தனைகளின் தாக்கங்கள் குறித்து விரிவாக பேச வேண்டியுள்ளது. பல் தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலைக்க  வேண்டுமாயின் பெரும் பான்மை இனம் குறித்துப் பேசுவதா? அல்லது நாட்டில் வாழும் சகல பிரஜைகளினதும் சம உரிமை பற்றிப்  பேசுவதா? என்பதை விவாதிக்க வேண்டும்.
இங்கு இறைமை என்பது பாராளுமன்றத்தின் இறைமையா? அல்லது மக்களின் இறைமை அதிகாரமா? மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதா? அல்லது அரசியல்வாதிகளின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதா? அரசியல் அமைப்பு என்பது பன்மைத்துவ போக்கைக் கொண்டிருக்க வேண்டுமா? அல்லது பெரும்பான்மை இனத்தின் தயவின் அடிப்படையில் தீர்மானிக்கும் போக்கைக் கொண்டிருக்க  வேண்டுமா? என்பன நம்முன்னுள்ள முக்கியமான கேள்விகளாகும்.
இங்கு பன்மைத்துவம் என்பது இனங்கள் சார்ந்தவை மட்டுமல்ல, பெண்களின் உரிமை, சிறுவர்களின் உரிமை, அங்கவீனர்களின் உரிமை  என பல்வேறு அம்சங்கள் பற்றிப் பேசவேண்டியுள்ளது. இவை பற்றிய வாதங்கள் எழுப்பப்படும் போதுதான் தேசியவாதம் அதிகாரமற்றதாக  கீழிறக்கப்பட முடியும்.
சுயநிர்ணய உரிமை என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. தமிழ் தேசிய அரசியலில் காணப்படும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகள் ஒரு சாராரின் நலன்களை மையப்படுத்தவதாகவே அமைந்துள்ளன. சிங்கள தேசியவாதத்தின் நடைமுறைக்கும் கோட்பாட்டிற்கும் இது விலக்காக அமையவில்லை. இதுவே அதன் தோல்விக்கும் காரணமாக அமைந்தது. இதிலிருந்த வெளியேறி அகன்ற இலங்கைக்கள் சம உரிமையோடு வாழ்வதற்கு புதிய கோட்பாடுகளை அதாவது சமத்துவம், சமாதானம், பன்மைத்துவம், மனித உரிமை என்பவற்றை மையமாகக் கொண்ட சுயநிர்ணய உரிமையை நோக்கி எமது பார்வைகள் திரும்ப வேண்டும்.

Previous Post Next Post
Breaking News
Loading...