கடைசி படம்... கண்ணீர்... கதறலுடன் விடைபெற்ற நயன்தாரா...

நயன்தாரா, சினிமாவிலிருந்து விலகிவிட்டார். தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராம ராஜ்யம்தான் அவரது கடைசி படம். இந்தப் பட ஷூட்டிங்கின் கடைசி தினமான நேற்று, படப்பிடிக்குழுவினரிடம் கதறி அழுதபடி விடைபெற்றார் நயன்தாரா! இனி நான் நடிக்க மாட்டேன்.

உங்களை ஷூட்டிங்கில் சந்திப்பது இதுவே கடைசி என்று கூறிவிட்டுச் சென்றார். வில்லு படத்தில் நடித்தபோது நடிகை நயன்தாராவுக்கும், நடிகர்-இயக்குநர் பிரபுதேவாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. கணவர்-மனைவி போல் வாழ ஆரம்பித்தனர்.

நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில், பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி நயன்தாரா-பிரபுதேவா காதல் தொடர்ந்தது.

நயன்தாராவின் காதலுக்கு விலையாக ரம்லத்தை விவாகரத்து செய்யத் தயாரானார் பிரபு தேவா. விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள் பிரபு தேவாவும் ரம்லத்தும். திடீர் திருப்பமாக, இருவரும் மனமொத்து பிரிவதாக எழுதிக் கொடுத்தனர்.
இதற்கு நஷ்டஈடாக ரம்லத்துக்கு பல கோடி சொத்துக்களை கொடுத்துள்ளார் பிரபு தேவா. இந்த செட்டில்மென்டும் சமீபத்தில் முடிந்துவிட்டது. அடுத்தமாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வருகிறது. விவாகரத்து தீர்ப்பு வந்ததும் பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்துகொள்கிறார்.
இப்போது இருவரும் மும்பையில் தங்கியிருக்கிறார்கள். அநேகமாக திருமணத்தையும் விரைவில் மும்பையிலேயே வைத்துக்கொள்வார்கள் என்று தெரிகிறது.
திருமணத்துக்குப்பின் நயன்தாரா சினிமாவில் நடிக்கக்கூடாது என்று பிரபுதேவா கண்டிப்புடன் கூறியிருக்கிறார். அதற்கு நயன்தாராவும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அவர் கடைசியாக, 'ஸ்ரீராமராஜ்யம்' என்ற தெலுங்கு படத்தில் சீதையாக நடித்து வந்தார். இது, என்.டி.ராமராவ் நடித்த 'லவகுசா' என்ற படத்தின் ரீமேக். அவருடைய மகன் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நடந்தது. அதில் நயன்தாரா கலந்துகொண்டு நடித்து வந்தார். நேற்று கடைசி நாள் படப்பிடிப்பு.
நயன்தாரா காலையில் படப்பிடிப்புக்கு வந்தபோதே சோகமாக காணப்பட்டார். மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் பிரியா விடை பெற்றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு அழுதார். அவருக்கு, நடிகர் பாலகிருஷ்ணா ஆறுதல் கூறினார். "திருமணம் ஆனபிறகும் நீ தொடர்ந்து நடிக்கலாம். கவலைப்படாதே'' என்றார். அதற்கு நயன்தாரா, "திருமணத்துக்குப்பின் நடிக்கக்கூடாது என்று 'அவர்' கண்டிப்பாக கூறிவிட்டார்'' என்று பதில் அளித்தார்.
பின்னர் அவர், படப்பிடிப்பு குழுவில் இருந்த 150 பேர்களுக்கும் கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். தன்னிடம் நீண்ட நாட்கள் 'மேக்கப்மேன்' ஆக பணிபுரிந்த ராஜுவுக்கு ஒரு பவுனில் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார். அதன்பிறகு படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் நயன்தாரா சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. நயன்தாரா கண்களை துடைத்துக்கொண்டு, விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டார்.
Previous Post Next Post
Breaking News
Loading...