செபஸ்தியான் செபமாலை

குழந்தை செபமாலை என அழைக்கப்படும் செபஸ்தியான் செபமாலை மார்ச்- 08 1940இல் பிறந்தார். 
ஈழத்து எழுத்தாளரும், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞருமாவார். இவற்றை விட ஆசிரியர், கவிஞர், நாடகாசிரியர், நெறியாளர், பாடகர், இசையமைப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர் என்று பல்வேறு திறமைகளைக் கொண்டவர்.
மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் முருங்கன் என்ற ஊரில் வசித்து வரும் செபஸ்தியான் செபமாலை அவர்கள் “குழந்தை" எனும் பெயரில் அறிமுகமானவர். ம. செபஸ்தியான், மு. செபமாலை ஆகியோரின் புதல்வர். செபமாலை மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைப் பெற்றார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

அல்லைப்பிட்டி பாடசாலை ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்து, 40 ஆண்டு சேவையின் பின்னர் ஓய்வுபெறும் போது முதலாந்தர அதிபராக பதவி வகித்து வந்தார். இவரின் மனைவி றோஸ்மேரி. பிள்ளைகள் - செ. லூந்துநாயகம், செ. இன்பராசா, செ. அன்புராசா, செ. திருமகள், செ. மலர்விழி, செ. கயல்விழி.
இவரின் தந்தையார் நன்கு மத்தளம் வாசிக்கும் அண்ணாவியார். இவருடைய மூத்த சகோதரன் சீமான் பாடகர். அடுத்தவர் சந்தியோகு (ரத்தினம்) நடிகர். வில்லன் பகுதிகளை நடித்தவர். அந்தோனிப்பிள்ளை நடிகர். மாசிலாமணி பாடகராக, குணசித்திர நடிகராக விளங்கினார். யேசுதாசன் தந்தையாரின் வழிவந்து, பக்கவாத்தியத்தினை ஒரேநேரத்தில் பல இசைக் கருவிகளை இசைப்பவர். வேதநாயகம் ஓவியக் கலையில் வல்லவர். நாடக ஒப்பனைகளுக்கு மெருகூட்டியவர்.
இத்தகைய பின்னணியில் 50களிலே முருங்கன் மகா வித்தியாலயத்தில் மாணவனாக இருந்த காலத்தில் பாடசாலையின் இசை, நாடக நிகழ்ச்சிகளில் பங்குபற்றித் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தினார். பாடசாலையில் தொடங்கிய குழந்தையின் கலைப்பயணம் கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் அதன் பின்னர் ஆசிரியராக வெளியேறிய பின்னரும் வேகமாக வளர்ச்சியடைந்தது.
இவரால் எழுதி, தயாரித்து மேடையேற்றப்பட்ட நாடகங்கள் பின்வருமாறு:
  • பணத்திமிர் (சமூக நாடகம்),
  • பாட்டாளிக்கந்தன் (சமூக நாடகம்),
  • இறைவனின் சீற்றம் (இலக்கிய நாடகம்),
  • தாரும் நீரும் (இலக்கிய நாடகம்),
  • புதுமைப்பெண் (இசை நாடகம்),
  • தாகம் (சமூக நாடகம்),
  • காவல்தெய்வங்கள் (சமூக நாடகம்),
  • விண்ணுலகில் (நாடகம்),
  • கல்சுமந்த காவலர்கள் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்),
  • வீரத்தாய் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்),
  • வீரனை வென்ற தீரள் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்),
  • யார் குழந்தை (நாட்டுக்கூத்து மரபு நாடகம்),
  • இணைந்த உள்ளம் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்),
  • அன்புப் பரிசு (இசை நாடகம்),
  • அழியா வித்துக்கள் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்),
  • வாழ்வளித்த வள்ளல் (இசை நாடகம்),
  • நல்வாழ்வு (சரித்திர நாடகம்),
  • பணமா? கற்பா? (சமூக நாடகம்),
  • விடுதலைப்பயணம் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்),
  • பரதேசி மகன் (சரித்திர நாடகம்),
  • இறைவனா? புலவனா? (நாட்டுக்கூத்து மரபு நாடகம்),
  • கவரி வீசிய காவலன் (இலக்கிய நாடகம்),
  • முதல் குடும்பம் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்),
  • மனமாற்றம் (சமூக நாடகம்),
  • திருந்திய உள்ளம் (சமூக நாடகம்),
  • இலங்கையைவென்ற இராசேந்திரன் (சரித்திர நாடகம்)
  • சிலம்பின் சிரிப்பு (இலக்கிய நாடகம்),
  • இலட்சியவாதிகள் (சமூக நாடகம்),
  • தியாகிகள் (சமூக நாடகம்),
  • நவீன விவசாயம் (நாட்டுக்கூத்து மரபு நாடகம்),
  • பூதத் தம்பி (நாட்டுக்கூத்து மரபு நாடகம்),
  • குண்டலகேசி (நாட்டுக்கூத்து மரபு நாடகம்).
    இலக்கியத்துறையில் இவரின் ஈடுபாடு 1955 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. இவரது முதல் ஆக்கமான “அறப்போர் அரைகூவல்” எனும் கவிதை இலங்கை வானொலியில் 1963 ஆம் ஆண்டு முதலில் ஒலிபரப்பானது. அதிலிருந்து இலக்கியம், கலை இலக்கியம், நாடகம், கவிதை என இலங்கை வானொலியிலும், தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதி வருகின்றார். இத்தகைய இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் வானொலி, பத்திரிகைகளில் ஒலிபரப்பாகியும், வெளியாகியுள்ளன.
    இவரால் இதுவரை எழுதி, வெளியிடப்பட்டுள்ள நூல்களின் விபரம் பின்வருமாறு:
    • இன்பத்தமிழின் இதய ஓலம்
    • அறப்போர் அறை கூவல்
    • இயாகப்பர் இன்னிசைப் பாடல்கள்
    • நாம் (மலர் - 1)
    • நாம் (மலர் - 2)
    • நாம் (மலர் - 3)
    • பரிசு பெற்ற நாடகங்கள் (சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது – 1998)
    • மரபு வழிநாடகங்கள்
    • மாதோட்டம் (கவிதை)

      அரச நிறுவனங்கள்

      இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற்கொண்டு அரச நிறுவனங்கள் வழங்கியுள்ள கௌரவங்களும், விருதுகளும் வருமாறு:
      • 1998ல் அரச இலக்கிய விழாவில் இவரது பரிசு பெற்ற நாடகங்கள் என்று நூலுக்குச் சாகித்திய விருது வழங்கப்பட்டது.
      • 1999ல் கொழும்பில் கலாசாரத் திணைக்களத்தினால் கலாபூசண விருது வழங்கப்பட்டுப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
      • 2000ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் ஆளுநர் விருது வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்திப் பொற்கிழியும் வழங்கப்பட்டது.
      • 2013 ஆம் ஆண்டில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு "நாடகக்கீர்த்தி" விருது வழங்கியது.

      அரச சார்பற்ற நிறுவனங்கள்

      • 1982ல் முருங்கன் மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சபை பாராட்டுவிழா எடுத்து பொன்னாடை போர்த்திப் பரிசுகள் வழங்கியது.
      • 01.11.94ல் மன்னார் மாவட்டக் கலை பண்பாட்டுக்கழகம், - “முத்தமிழ் வேந்தர்” பட்டம்
      • 1995ல் மட்டக்களப்பில் நடைபெற்ற வடக்குக் கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் பொன்னாடை போர்த்தப்பட்டு விருதும் வழங்கப்பட்டது.
      • 02.09.2000 அன்று மன்னாரில் இடம்பெற்ற நாடக நிகழ்வில் - “திருக்கள வேந்தன்” விருது
      • 2005ல் மட்டக்களப்புப் பக்கலைக்கழக நுண்கலைத் துறை - “தலைக்கோல்’ விருது
Previous Post Next Post
Breaking News
Loading...