தமிழ் சினிமாவில் தந்தைப்பாசம்


தமிழ் சினிமாவுக்கென்று நிறைய கல்யாணகுணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது செண்டிமெண்ட். இந்த சென்ரிமெண்ட் மசாலா கலக்கப்படாத எந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறமுடியாது என்பது அதன் சாபக்கேடுகளில் ஒன்று.
அதிலும் உறவு முறை சித்திகரிப்புகளில் தாய்ப்பாசம், காதல், சகோதரப்பாசம், நட்பு, எஜமான விசுவாசம், தேசப்பற்று, சாதிப்பற்று என்று வரும் பட்டியலில் மிகத்தொலைவிலேயே தந்தையர் பாசம் இருக்கின்றது. தாயை முன்னிலைப்படுத்துவதாலேயே பெண்களை கவரலாம் என்கிற ஒரு உத்தி இருப்பது இதற்குகாரணமானாலும், இதனை முன்னிலைப்படுத்தி தந்தையரை சித்திகரிக்கும் விதம் மிகுந்த விசனத்துக்குரியது. அதிலும் ஹீரோயினின் தந்தை என்றால் கேட்கவே வேண்டாம் 90% அவர்தான் வில்லன். அதனால் ஹீரோவுடன் மோதி, “நீ இவளோட அப்பன் என்கிற ஒரே காரணத்துக்காக உன்னை உயிரோட விடறேன்” என்று விரலை சொடுக்கி ஏகவசனத்தில் ஹீரோ பேசுவதை கிழிந்த சட்டை, உடலெங்கும் அப்பிய புழுதி மற்றும் காயங்களுடன் கேட்கவேண்டும். கதாநாயகனின் அப்பாவுக்கு கதாநாயகனிடம் அடிவாங்கும் சந்தர்ப்பம் வராதே தவிர அவரது இருப்பு பெரும்பாலும் படங்களில் உணரப்படுவதேயில்லை.

ஒரு பிள்ளை ஆரோக்கியமாக வளர தந்தை – தாய் உறவு நிலை நன்றாக இருக்கவேண்டும். அதே போலவே ஒரு சமுதாயம் இயங்கவும். ஆனால், தாயை போற்றுவதற்காக தமிழ் சினிமாவில் தந்தையர் பெரும்பாலும் காதலியை கர்ப்பினியாக்கிவிட்டு ஓடுபவர்களாகவோ (மிஸ்டர் பாரத்) குடிகாரர்களாகவோ, வேறு பெண்களுடன் தொடர்புள்ளவர்களாகவோ காட்டப்படுவது வழக்கம். இதற்கு எதிர்மாறாக நல்ல தந்தையை காண்பிக்கிறேன் பேர்வழி என்று தந்தையரை அளவிற்கு மிஞ்சிய ஏமாளிகளாக மகன்களால் பிற்காலத்தில் கைவிடப்படுபவர்க்ளாக காண்பிப்பது இன்னொரு மிகை (ஒன்பது ரூபாய் நோட்டு, சிவாஜியின் பல படங்கள்). போனால் போகட்டும் என்று ஒரு நகைச்சுவை பாத்திரமாக (ப்ரியமுடன்) அல்லது எது செய்தாலும் மகனை கரித்துகொட்டும் ஒருவித சைக்கோ காரக்டராகவோ வருவது (எம்டன் மகன், தனுஷின் படங்கள்) இன்னொரு வகைபடங்கள். இவை எல்லாவற்றையும் தவிர்த்து தந்தை – மகன் உறவை ஒரு யதார்த்தமான முறையில் வெளிக்காட்டிய படங்களை விரல் விட்டு எண்ணலாம். அப்படியான சில படங்கள் பற்றிய பார்வை இது.

கிங்

பெரியளவில் வெற்றி பெறாத படம். விக்ரம் – சினேகா இணைந்து நடித்த இப்படத்தில் நாசர் – விக்ரம் முறையே அப்பா மகனாக நடித்தனர். ஹாங்காங்கில் இருவரும் இருப்பதாக வரும் காட்சிகளில் இருவரதும் உறவுமுறை நன்றாக காட்டபட்டிருக்கும். நோயால் தாக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கும் விக்ரத்திடம் அதை மறைத்து தனக்கு வருத்தம் என்று நாசர் நாடகமாடும் படம். உண்மையை விக்ரம் உணரும் கட்டங்களில் அவரது நடிப்பு அற்புதமாக இருக்கும். அவர் நடித்த படங்களிலேயே அற்புத நடிப்பை கொண்ட சில காட்சிகள் இப்படத்தில் இருக்கின்றன. இயக்குனர் சாலமனின் (கொக்கி, லீ) முதல் படம் இது. இப்படத்திற்காக 8 பாடல்களை உருவாக்கி (வைரமுத்து – தினா) 3 பாடல்களை ஆல்பமாக தொலைக்காட்சிகளில் மட்டும் ஒளிபரப்பினார்கள்.


லவ் டுடே

இதுவும் ஒரு அறிமுக இயக்குனரின் படம். பாலசேகரன் இயக்கிய படத்தில் ரகுவரன் – விஜய் தந்தை மகனாக (விஜய் பஞ்ச் டயலாக் பேசுவதற்கு முற்பட்ட காலம்) நடித்திருந்தனர். இவ்வளவு அன்பான, நட்பான அப்பா எல்லார் கனவிலும் நிச்சயம் வந்திருக்கும். அதிலும் காலையில் அவசர அவசரமாக புறப்பட்டு பஸ் ஸ்டாண்டில் நிற்கும் சுவலக்‌ஷ்மியை பார்க்க செல்லும் விஜயை ரகுவரன் “காலங்காத்தால எங்க இவ்வளாவு அவசரமாக போற” என்று கேட்கும் ரகுவரனிடம் விஜய் “கம்பியூட்டர் க்ளாஸ்க்கப்பா” என்று சொல்ல அவர் சென்ற பின் (தனக்கேயுரிய) புன்னகையுடன் “நான் பாக்காத கம்பியூட்டர் க்ளாசா! எந்த பொண்ணு பின்னாடி சுத்திறானோ” என்று ரகுவரன் சொல்லும் காட்சி அற்புதம். அதேபோல மீன் தொட்டிக்கு அருகில் வைத்து விஜய்க்கும், சாப்பாட்டு மேசையில் வைத்து அவர் நண்பர்களுக்கும் ரகுவரன் அறிவுரை சொல்லும் காட்சிகள் நன்றாக இருக்கும்.

தவமாய் தவமிருந்து

படத்தின் முற்பாதியில் ராஜ்கிரனை தியாகி ரேஞ்சிற்கு கட்டமைத்த சேரன் பிற்பாதியில் சற்று யதார்த்ததுக்கு திரும்பியிருப்பார். கஷ்டப்பட்டு சேரனை படிப்பிக்க அவர் காதலியுடன் தகப்பனிடம் வாங்கிய பணாத்துடன் ஊரைவிட்டு ஓடி பின் ஓரளவு நல்ல நிலையில் மீண்டும் பெற்றோரை வைத்து போற்றுவதாகவரும் கதை. சேரனுக்கு பிள்ளை பிறந்தது தெரிந்து வரும் ராஜ்கிரண் அவருக்கு பண உதவி செய்யும் காட்சியிலும் அதேபோல சேரனின் வீட்டை பார்த்து அடு பற்றி சேரனிடம் கேட்கும்போது சேரன் கடனில் வாங்கிய வீடென்று சொல்ல, “எப்பவும் நம்ம வருமானத்துக்குள்ள வாழ பாக்கனுமப்பா” என்று சொல்வதும் உணர்வுபூர்வமான காட்சிகள். படத்தின் பிற்பகுதியில் வசனமேயில்லாமல் பிண்ணனி இசையுடன் 10 நிமிடங்களுக்கு மேலாக வரும் காட்சி ஒரு கவிதை. அதுபோல ஒரே ஒரு ஊரில ஒரே ஒரு அம்மா அப்பா பாடலின் காட்சியும் நல்ல ரசனையுடன் படமாக்கப்படிருக்கும்.

உல்லாசம்

இப்படத்தில் அஜித்தும் விக்ரமும் மற்றவர்களின் தந்தையருடனே (ரகுவரன், பாலசுப்ரமணியம்) நெருக்கமாக இருந்தாலும் அவர்களின் உறவுமுறை நன்குகாட்டப்படும். தனக்கு தெரிந்த கவிதை, பாடல், என்று பாலா விக்ரத்துக்கு சொல்லிக்கொடுத்து அவரை மென்மையாக வளர்க்க, ரகுவரன் தனக்குத் தெரிந்த அடி தடி, அதிரடிகளை அஜித்திற்கு சொல்லி வளர்க்கிறார். ரகுவரனின் அடியாள ஒருவர் இறக்க அந்த அடியாளின் கதிதான் அஜித்திற்கும் ஏற்படும் என்று விகரம் ரகுவரனிடம் கடுமையாக சொல்ல ரகுவரன் தனது ரவுடிசத்தை மூட்டைகட்ட முடிவெடுப்பார். இந்த சந்தர்ப்பத்தில் “சின்ன வயசில குரு ...” என்று தொடங்கி ரகுவரன் பேசும் வசனமும், மஹேஸ்வரியை விக்ரமும் காதலிப்பதால் அவரை விட்டு விலகும்படி அஜித்திடம் பாலா கேட்கும் காட்சியும் சிறப்பாக அமைந்தபடம். பாலகுமாரனின் வசனமும் ஜேடிகெர்ரியின் இயக்கமும் நன்றாக இருந்தும் சரியான திரையரங்குகளில் திரையிடப்படாமல் அமிதாப்பின் AB Corporationஐயே தமிழ்நாட்டை விட்டு வெளியேற வைத்தபடம்.

காதல்கவிதை

ஜனாதிபதி விருது பெற்ற அகத்தியனின் இயக்கத்தில் மணிவண்ணன் – பிரஷாந்த் முறையே தந்தை மகனாக நடித்தபடம். தந்தை மகன் உறவை இன்னும் ஆழமாக காட்டியிருக்கலாம் என்றபோதும் சில காட்சிகள் நன்றாக இருக்கும். மணிவண்ணன் தொழிலதிபர். மனைவி அம்பிகா. மகன் பிரஷாந்த். பிள்ளையும் கணவனும் எப்போதும் வீட்டில் நிற்காததால் அம்பிகா எந்நேரமும் சண்டையிட்டுகொண்டே இருப்பார். பின்னர் மணிவண்ணன் இதை உணார்ந்து அவரை மாற்றுவார். இதில் வீட்டில் அமைதி இல்லை என்று வெளியே திரியும் பிரஷாந்தை மணிவண்ணன் கையேந்தி பவனில் வைத்து காணும் காட்சி சிறப்பு.

கிரீடம்

பிரியதர்ஷனின் மலையாளாத்திரிப்படத்தின் தமிழ் படம் இது. ராஜ்கிரண் – அஜித் தந்தை மகனாக நடிக்க புதுமுக இயக்குனர் விஜை சிறப்பாக இயக்கினார். தன் மகன் போலிஸ் ஆகவேண்டுமென்ற தந்தையின் கனவை யதார்த்தமாக அணுகியிருந்தார். அதனாலோ என்னவோ படம் பெரிய வெற்றியை பெறவில்லை. மற்றும்படி தன் மகனை ஒவ்வொரு கட்டத்திலும் தாங்கும் ராஜ்கிரணின் அணுகுமுறையும், போலீசாக இருந்தபோதும் குடும்ப அங்கத்தவர்களிடம் அவர் காடும் மென்மையும் என்னை கவர்ந்தது. அஜித்தும் மென்மையாக, ஒரு matured கதாபாத்திரமாகவே மாறி அசத்தியிருப்பார்.

வாரணம் ஆயிரம்

தந்தைக்கு தியாகி என்றோ, அப்பாவி என்றோ வேஷம் கட்டாமல் தன் மகனுக்கு ஒரு role model ஆக இருக்ககூடிய தந்தையை படத்தில் காட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல்
”முதலடி வாங்கியவன் முடிவுக்கு அஞ்சுவதில்லை
வாங்கும் வரை வாதங்கள், வாங்கியபிறகு எல்லாம் வேதங்கள்” என்ற வரிகளுக்கேற்ப வாழ்க்கையை அனுபவங்களின் தொகுப்பாக, எவரையும் புனிதராக்காமல் சொல்லும் படம். படத்திலேயே அப்பா சூர்யா சொல்வதுபோல life has to go on என்பதை மீண்டும் மிண்டும் வலியுறுத்துகிறபடம்.

வேங்கை

அண்மையில் வெளிவந்த ஒரு திரைக்காவியம். இதில் தனுஸ்,சேரன் தந்தை பாசம் உள்ளவர்களாகவும் தந்தையின் மீது எதிரிகள் கொண்ட கோபத்தின் மீது தனது மகனிற்க்கு ஏதும் செய்துவிடுவார்கள் என்று மகனை வெளியூர் அனுப்புகிறார். அங்கு அவனுக்கு ஆபத்து வந்து அவனும் தந்தை தூக்கிய ஆயுதமான அரிவாள் தூக்கும் போது அப்போது அவர் மனம் கலங்குவதும். தனுஸின் காதலியான தமன்னா தனுஸின் தந்தை பற்றி தப்பாய் சொல்லும் போதும் தனக்கு காதலைவிட தந்தை பாசமே உயர்ந்தது என்று உரத்த குரலில் கூறும் போது பார்ப்பவர்களை மனம் சிலர்க்க வைக்கிறது.

தெய்வத்திருமகள்

இப் படம் அண்மையில் வெளிவந்த திரைக் காவியம் சியான் விக்ரமின் நடிப்பிற்க்கு எல்லையென்பது இல்லை என்பதை நிரூபித்த ஒரு படம்..இதிலும் விக்ரம் மனவளர்ச்சி குன்றிய ஒருவராக சித்தரிக்கப்பட்டாலும் அவ்வாறான தந்தை தனது மகள் நிலா மீது கொண்ட எல்லையில்லா பாசத்தினையும் மகள் தந்தை மீது கொண்ட பாசத்தையும் சித்தரித்து அவ் வாழ்க்கையை எல்லோருடைய கண்முன்னும் வாழ்ந்து காட்டி சென்றது. என்றால் மிகையாகது. இதிலும் சிறப்பானது ஒரு தந்தைப் பாசம் வெளிக்காட்டப்படுகிறது.

இவ்வாறு வேறு சில படங்கள் காணப்பட்டாலும் ஒப்பீட்டளவில் நோக்கும் போது இவ்வாறனா தந்தை பாசம் கொண்ட திரைக்காவியங்கள் பெருமளவு பேசப்படுவதும் இல்லை, மற்றைய உறவு முறைகளை விட இவ் உறவு முறை குறைவானதாகவே இன்றும் தமிழ் சினிமா காணப்படுகிறது.
Previous Post Next Post
Breaking News
Loading...